சிட்டி தான் என்னிடம் சொன்னார் . சிட்டியும் அண்ணாத்துரையும் பச்சையப்பன் கல்லூரியில் வகுப்புத்தோழர்கள் . பலவருடங்களுக்கு பின் சிட்டியை அண்ணாதுரை முதல்வராக சந்தித்தவுடன் ஆனந்த கண்ணீர் வடித்தாராம். அப்போது சிட்டி அகில இந்திய வானொலி யில் உயர் அதிகாரி . அகில இந்திய வானொலிக்காக அண்ணாவை பேட்டி எடுத்து விட்ட பின் , அன்றைக்கு பரபரப்புக்கு காரணமாக இருந்த விருதுநகர் பெ. சீனிவாசனை பேட்டியெடுக்க நினைத்து அதையும் சிட்டி செயல் படுத்தினார் .
உடனே கருணாநிதி சிட்டியிடம் வந்து ' என்ன சார் .இப்படி செய்திட்டீங்க . அண்ணாவை பேட்டி எடுத்துட்டு அடுத்ததா பெ .சீனிவாசனை பேட்டி எடுக்கிறீங்க .இவன் ஒரு பொறுக்கி சார் . இவனுக்கு என்ன யோக்யதை இருக்குன்னு இவனையெல்லாம் பெரிய ஆளாக்கிறீங்க . காமராஜரை அவமானப்படுத்த இவனை அவரை எதிர்த்து தேர்தல்லே நிறுத்தினோம் . ஜெயிச்சிட்டான் . ஜெயிச்சதுக்கு காரணம் இவனா சார் . சும்மா குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதை. தமிழகத்திலே எங்க கட்சிக்கு ஆதரவா எழுந்த அலையிலே சும்மா குருட்டு அதிர்ஷ்டத்திலே ஜெயிச்சவன் . "
கருணாநிதியின் முன் ஜாக்கிரதையை இந்த சம்பவம் சுட்டுகிறது .தீர்க்க தரிசனத்தையும் கூட .
ஐம்பெரும் தலைவர்களில் அண்ணா தவிர பிறரை படிப்படியாக பின்னகர்த்தி , அடுத்த இரண்டே வருடத்தில் அண்ணா மறைந்த போது கட்சியையும் ,முதல்வர் பதவியையும் கைப்பற்றிய மிக பெரிய புத்திசாலியின் பதற்றம் !
பெ.சீனிவாசனும் பின்னர் கருணாநிதி சொன்னது சரிதான் என்பதை தன் நடத்தைகளால் நிரூபித்தார் . இப்போது பல இடம் தாவி விட்டு அண்ணா தி.மு.க.வில் இருக்கிறார்.. அல்லது அங்கிருந்தும் விரட்டப்பட்டு விட்டாரா ?
சீனிவாசன் , கோவை செழியன் ,ஜி .விசுவநாதன் மூவரும் நாங்கள் தான் உண்மையான அண்ணா தி.மு.க என்று பிரகடனம் செய்து எம்ஜியாருக்கு எதிராக அவர் முதல் முதலாக ஆட்சிக்கு வந்த கட்டத்தில் அடித்த கூத்து ! அதன் பின் சிதறு தேங்கா போல மூவரும் பிரிந்து தனி தனி கட்சி யில் இணைந்தது இதெல்லாம் நினைத்து பார்க்க வேடிக்கையான அரசியல் காட்சிகள் .
பாவம் பெ . சீனிவாசன் ! காலா காந்தியை தேர்தலில் தோற்கடித்ததால் தமிழ் நாட்டை பொறுத்தவரை ஏதோ கோட்சே போல் ஆகி மக்களாலும் அரசியல்வாதிகளாலும் கூட வெறுத்து ஒதுக்கப்பட்டவர் .
சினிமா நடிகை 'தேன் நிலவு' வசந்தியை திருமணம் செய்து......அப்புறம் ஒரு வேடிக்கை . சிவகாசி யில் 1989 ல் நடிகை ஸ்ரீதேவியின் அப்பா ஐயப்பனையும் சட்ட சபை தேர்தலில் தோற்கடித்தார் .
நல்ல பேச்சாளர் ! பத்து ஆண்டு முன் என்று நினைக்கிறேன்.. ஒரு முறை தேர்தலில் போட்டியிட்ட நிலையில் ஸ்ரீவில்லி புத்தூரில் முச்சந்தியில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்த போது தன் திருமணத்திற்காக காமராஜரை அழைக்க போய் பத்திரிகை கொடுத்ததையும் அந்த எளிமையான அருந்தலைவர் பெருந்தன்மையுடன் இவர் திருமணத்திற்கு வந்ததையும் அழகாக விவரித்து பேசினார் பெ . சீனிவாசன் .
" திருமண மேடையில் நான் அமர்ந்திருக்கிறேன் . படிக்காத மேதை , ஏழைபங்காளன், பெருந்தலைவர் அந்த திருமண அரங்கினுள் நுழைந்தார் . நீண்ட நெடிய கொடிமரம் மெல்ல அசைந்து அசைந்து வருவதை போலிருந்த காட்சி இன்றும் என் கண்ணுக்குள் விரிகிறது ."


Highly readable. keep writing.