Share

Jul 12, 2012

கண்ணதாசனின் அரசியல் வாழ்வு

மீள் பதிவு
20.10.2008 ல் எழுதப்பட்டது.


அரசியலில் இருந்துகொண்டே சினிமாவுக்கு பாடல் எழுதிய கண்ணதாசன் அவ்வப்போதைய அரசியல் சூழ்நிலை,தன் மன நிலை இரண்டையும் சினிமா பாடல்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.








திமுக வில் இருந்து சம்பத்தோடு வெளியேறிய சூழலில் அண்ணாதுரை பற்றி
 " அவனை நினைத்தே நானிருந்தேன். அவன் தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான். இன்னும் அவனை மறக்கவில்லை . அவன் இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை. அண்ணன் காட்டிய வழியம்மா. " -படித்தால் மட்டும் போதுமா.

"அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே " அவர் அண்ணா ஏ எல் எஸ் இவர் கேட்டு பணம் கொடுக்காததனால்.

தமிழ் தேசிய கட்சி காங்கிரஸில் இணையும் சூழலில் காமராஜரை குறித்து
 ' அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி. என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி.' வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி ' என்ற பாடல் - பட்டணத்தில் பூதம்.



அண்ணாத்துரை அமெரிக்காவில் புற்று நோய்க்கு வைத்தியம் பார்த்து விட்டு திரும்பி வந்த போது “நலம் தானா? நலம் தானா? உடலும் உள்ளமும் நலம் தானா?“

இப்படி பல பாடல்கள் பற்றி பட்டிமன்ற பேச்சாளர்கள் , பிரபலமான பேச்சாளர்கள் மட்டுமல்ல சாதாரண உரையாடல்களில் இப்படி பலரும் பல கண்ணதாசன் பாடல்கள் பற்றி பேசிகொள்வார்கள்.

நான் இங்கு குறிப்பிட போகும் பாடல் பற்றி யாருக்கும் தெரியாது. ஏனென்றால் இந்த பாடல் பற்றி யாருமே குறிப்பிட்டதில்லை.
"நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்" பாட்டின் சரண வரிகள்.

அப்போதெல்லாம் தி.மு.க வுக்கு அடுத்த இடத்தில் ஸ்தாபன காங்கிரஸ் இருந்தது. கண்ணதாசன் இந்திரா காங்கிரஸ். என்றாலும் கண்ணதாசனின் இயல்பான மீறல் காமராஜரை தன் தலைவராக வரித்து இரண்டு காங்கிரஸ் இயக்கமும் இணைந்து அரசியல் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் உறுதி கொண்டிருந்தார். காமராஜர் மேல் அளவு கடந்த பற்று். திமுக வுக்கு எதிர்க்கட்சி ஸ்தாபன காங்கிரஸ. திமுக இறங்கினால் ஸ்தாபன காங்கிரஸ் ஆட்சி கட்டில் ஏறும் என்ற நிலை.( தீப்பொறி ஆறுமுகம் அப்போது ஸ்தாபன காங்கிரஸ் பேச்சாளர் !)

திடீரென்று எம்ஜியார் திமுகவிலிருந்து விலகி அண்ணா திமுக ஆரம்பித்தவுடன் மக்கள் செல்வாக்கு அவருக்கு வந்து விட்டது.

 நாஞ்சில் மனோகரன் தான் கண்ணதாசனின் அரசியல் எதிரி என்று கவிஞர் அறிவித்திருந்தார். திண்டுக்கல் பாராளுமன்ற இடைதேர்தலில் நாஞ்சில் மனோகரன் எம்ஜியாரால் வேட்பாளர் ஆக்கப்பட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என கண்ணதாசன் பகிரங்கமாக அறிவித்தார்.

திராவிட தலைவர்களில் நாஞ்சில் மனோகரனையும் மாதவனையும் கண்ணதாசனுக்கு பிடிக்காது . மந்திரகோல் மைனர் சுகவாசியாய் எந்த தியாகமும் செய்யாதவர் என்று கண்ணதாசனுக்கு கோபம் . மாதவன் திமுக வேட்பாளராய் கண்ணதாசன் நின்று தோற்ற தொகுதியை அடுத்த பொது தேர்தலில் திமுக வேட்பாளராய் கைப்பற்றியவர். அதற்கடுத்த தேர்தலில் மீண்டும் வென்று அண்ணா மந்திரி சபையில் மந்திரியானவர். மாதவனை பாராட்டி திமுக தொண்டர்கள் வீரவாள் கொடுத்தார்கள். உடனே கண்ணதாசன் தன் " கடிதம் " பத்திரிகையில் ' தம்பிகள் கத்தி கொடுத்தார்கள். பாவம் கிண்ணத்தை கொடுக்க மறந்து விட்டார்கள் ' என்று கிண்டல் செய்து எழுதினார்.
திமுகவை வெறுத்த கண்ணதாசனுக்கு திமுகவில் இரண்டு பேர் மேல் மட்டும் பாசம் கடைசிவரை இருந்தது. ஒருவர் கருணாநிதி! இன்னொருவர் அன்பில் தர்மலிங்கம்!  ஆமாம்.கண்ணதாசனே இப்படிச் சொன்னார்.

கருணாநிதிக்கும் கண்ணதாசனுக்கும் ஒருவிதமான Love and Hate relationship!ஒரு வேளை பூர்வஜென்ம பந்தமோ என்னவோ! முதல் முறையாக 1940களில் எம்.ஜி.சக்கரபாணி  கண்ணதாசனை அழைத்துப் போய் கருணாநிதியை அறிமுகப்படுத்திய போது தனக்கு
 ‘ காதலியை ப்பார்த்த உணர்வு’ ஏற்பட்டதாகவே கவிஞர் குறிப்பிட்டுள்ளார். கண்ணதாசன் இறந்த போது கருணாநிதி
 “ தென்றலாய் தீண்டியவனும் நீ! நெருப்பாய் சுட்டவ்னும் நீ! தாக்குகின்ற கணை எத்தனை நீ தொடுத்தபோதும் அத்தனையும் தாங்கும் என் நெஞ்சே உன் அன்னை!” என்று இரங்கல் எழுதினார்.



தாக்குதல் என்றால் சாதாரண தாக்குதல் அல்ல. வனவாசத்தில் எழுதியவை மட்டுமல்ல.


மேடையிலும். கருணாநிதி ‘ காமராஜரின் தாயார் கருவாடு விற்றவர்’ என்று சொன்னதற்காக கண்ணதாசனின் பதிலடி’ ஆமாம். என் தலைவனின் தாய் கருவாடு தான் விற்றார். கருவாடு மட்டும் தான் விற்றார்’
நெல்லை கண்ணன் பேசிய விஷயம் இது.


 கண்ணதாசன் பெத்தடின் இஞ்சக்சன் போதையில் அளவுக்கு மீறி மூழ்கிய போது கண்ணதாசனின் பிள்ளைகள் கருணாநிதியிடம் போய் அழுதார்கள். அப்போது கருணாநிதி கவிஞரிடம் கேட்ட வார்த்தைகள்: ’எங்களையெல்லாம் அழ வைக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறாயா?’


திண்டுக்கல் பாராளுமன்ற இடை தேர்தலில் மாயத்தேவர் நிறுத்தப்பட்டு அண்ணா திமுக அமோக வெற்றி. ஸ்தாபன காங்கிரஸ் இரண்ட்ராமிடம் . திமுக மூன்றாமிடம். இந்திரா காங்கிரஸ் நான்காமிடம்.

'சிவகாமி உமையவளே முத்துமாரி உன் செல்வனுக்கு காலம் உண்டு முத்துமாரி '
என்று காமராஜர் எதிர்காலம் பற்றி கணித்த கண்ணதாசனுக்கு அரசியல் சூழல் மாறிவிட்டது என புரிந்து விட்டது.


எம்ஜியாரை கடுமையாக எதிர்த்தவர் கண்ணதாசன்.

 எம்ஜியாரும் அவர் கட்சியும் தமிழகத்தை ஆக்கிரமித்ததை அவலமாக நினைத்து தான்

" அழகாக தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன் .
அநியாயம் செய்பவர்க்கும் மரியாதை கண்டேன் .
சதிகார கும்பல் ஒன்று சபையேற கண்டேன் "

தன் பதற்றத்தை கண்ணதாசன் ' என் மகன் ' படப்பாடலில் வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து எம்ஜியாரை கடுமையாக சாடினார். எம்ஜியார் முதல் முறை ஆட்சியமைத்தபோது மதுவிலக்கை கடுமையாக அமல் படுத்தினார்.
கண்ணதாசன் பத்திரிகையில் ஒரு கேள்வி:

ஒன்றிற்கு மேற்பட்ட மது பெர்மிட் வைத்திருப்பவர்கள் சரண்டர் செய்யவேண்டும் என்று எம்ஜியார் ஆணையிட்டிருக்கிராரே?

கண்ணதாசன் பதில்:
'ஆண்டவனே வந்து கேட்டாலும் நான் சரண்டர் செய்யமாட்டேன். உங்கள் எம்ஜியாரிடம் இன்னொரு சட்டம் போட சொல்லுங்கள்; 'ஒரு காதலிக்கு மேல் வைத்திருப்பவர்களை சரண்டர் செய்ய சொல்லுங்கள் '

கடைசியில் எம்ஜியார் கண்ணதாசனை தமிழக அரசின் ஆஸ்தான கவியாக நியமித்தார். உடனே கண்ணதாசன் சொன்னார்!
" எம்ஜியாருடன் நான் வாழ்நாள் முழுவதும் நடத்திய யுத்தத்தில் கடைசியாக தோற்று விட்டேன் "


கண்ணதாசனின் பாடல்களை காட்டிலும் அவரது அரசியல் வாழ்க்கை தான் ரொம்ப விஷேசமானது.

ஒரு முறை குமுதம் கேள்வி பதிலில்
கேள்வி : எம்ஜியாரின் 'நான் ஏன் பிறந்தேன் ', கருணாநிதியின்' நெஞ்சுக்கு நீதி' , கண்ணதாசனின் 'வனவாசம்' ஆகிய சுயசரிதை நூல்களில் எந்த நூல் சிறந்தது?

அரசு பதில் : 'வன வாசம்' தான். ஏனென்றால் அதில் "உண்மை " இருக்கிறது.

2 comments:

  1. கலைஞர்,அன்பில் மீது மட்டும் ஏன்?

    ReplyDelete
  2. வனவாசம் படிக்கும் ஆவலைத் தூண்டி விட்டீர்களே :)

    அரசியலில் தோற்றவர்களிடம் இருக்கும் ஒரே காரணம் “உண்மை”. அதை வைத்துக் கொண்டு அரசியல் பண்ண முடியாது.

    நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா பாட்டு எனக்கு பிடிச்ச பாட்டு.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.